Sunday, July 13, 2008

ஏற்காடு

கோடை வாசஸ்தலங்கள் என்றாலே தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர் என்றுதான் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும். ஏன் என்றால் இவை பற்றித்தானே எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால், ஏற்காடு போன்று வெளிச்சத்துக்கு வராத, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்  தலங்களும் இங்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
மலைகளின் இளவரசன், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு, வெப்பக் கொடுமையில் இருந்து விடுதலை பெற நினைக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள உயரமான பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு எப்போதுமே இதமான குளிர்தான். மற்ற மலைப்பிரதேசங்களைப் போல நடுங்க வைக்கும் கடும் குளிர் கிடையவே கிடையாது!
வெப்பநிலை அதிகபட்சம் 29டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 13 டிகிரி செல்சியசும் என்பதால் எப்போதும் குளிர்ச்சியையும், இயற்கையின் கவர்ச்சியையும் கண்டு மகிழலாம்.
மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தை மறைத்துவிடும். ஏரிகள் நிறைந்து, காடுகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் இதற்கு ஏரிக்காடு என்று பெயர்சூட்டினார்கள். பின்னர் இது ஆங்கிலேயர் காலத்தில் மருவி ஏற்காடு ஆனது! சேலம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரம்தான் ஏற்காடு. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டால் ஒரு மணிநேரத்தில் ஏற்காட்டை அடைந்து விடலாம்.
20 கொண்டை ஊசி விளைவுகளை கடந்து செல்லும் போது அடர்ந்த காடுகள், அதன் உள்ளே அமைந்துள்ள காபி தோட்டங்கள், வண்ண, வண்ண நிறத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள் நம்மை இருகரம் நீட்டி வரவேற்கும்.
ஏறத்தாழ 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் எல்லோரையும் முதலில் கவர்ந்து இழுப்பது இயற்கை எழில் மிகுந்த குன்றும், அதையொட்டி கடலின் பின்னணியில் அமைந்துள்ள ஏரியும்தான். அழகிய மணம் பரப்பும் பூக்களுடன் கூடிய தோட்டங்கள், எப்போதும் இளமைபேசும் மரங்கள் சுற்றி நின்று ஏரிக்கு அழகு சேர்க்கின்றன. இந்த இனிய சூழலில் ஏரியில் படகு சவாரி செய்வது மெய்மறக்க வைக்கும்.
ஏரிக்கு நடுவே சிறிய தீவில் உள்ள மிருகக்காட்சி சாலையும், செயற்கை நீரூற்றும் ஏரிக்கு புகழ் சேர்க்கின்றன. ஏரிக்கு அருகிலேயே தோட்டக்கலைத்துறை அமைந்துள்ளது. அண்ணா பூங்காவில் வாசனை மிகுந்த மலர்ச் செடிகள் மட்டுமின்றி, சிறுவர்கள் விளையாடி மகிழும் கருவிகளும் இடம்பெற்றுள்ளன.
மலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், ஜெஸ்ரி சீட், ஆகியவையும் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். லேடீஸ் சீட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம்!
300 மீட்டர் உயரத்தில் இருந்து பூமியில் விழும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சியின் அழகை எத்தனை கேமிராக்கள் கொண்டு சென்றாலும் அள்ளிவரமுடியாது. ஆம், காணகண்கோடி வேண்டும். ஆனால், ஏற்காடு ஏரியில் நீர்நிரம்பினால் மட்டுமே இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். சேர்வராயன் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்வதுதான் மலைவாழ் மக்களின் தொழில்.
கடல் மட்டத்திலிருந்து 5342 அடிஉயரத்தில் உள்ள காவேரியம்மன் மலைக்கோயில் மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
பகோடா பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினரின் 4 சிறுகோயில்களும் பழமையானவைதான். 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாலயங்களும் இங்கு உள்ளன. இங்கு உள்ள மான்போர்ட் பற்றி அகில இந்திய அளவில் புகழ்பெற்றது ஆகும்.
இந்தியாவில் மிகக்குறைந்த செலவில், நிறைந்த ஆனந்தத்தை அள்ளித்தரும் ஏற்காடு கண்களையும், மனதையும் நிச்சயம் களவாடிவிடும். இது வெயில் வறுத்து எடுக்கும் கோடை விடுமுறை காலம். இந்த சூழ்நிலையில் சுற்றுலாவுக்கு ஏற்காட்டை தேர்ந்தெடுக்கலாம். என்ன, நீங்கள் புறப்படத் தயாராகிவிட்டீர்களா?.

No comments: