Monday, July 14, 2008

வரதய்யா பாளையம்

தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள வரதய்யா பாளயம் அருகே அற்புதமான ஒரு சிறு நீர்வீழ்ச்சி உள்ளது. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும் அனைவராலும் ரசிக்கக் கூடியது.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில், நெல்லூர் மாவட்டத்தில் தடாவைத் தாண்டியதும் தெற்காகத் திரும்பும் ஸ்ரீ காளஹஸ்த்தி செல்லும் சாலையில் 11 கி.மீ சென்றால் வரதய்யா பாளையத்தை அடையலாம்.
அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மீண்டும் தெற்காக ஒரு சிறிய சாலை பிரியும். ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சி எங்கு என்று அங்கிருப்பவர்களைக் கேட்டால் வழி சொல்வார்கள். (அதன் உண்மையானப் பெயர் உப்பலமடுவு நீர்வீழ்ச்சி. ஆனால் தடா நீர்வீழ்ச்சி என்று அறியப்பட்டுள்ளது).
ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை (10 கி.மீ. தூரம்) கரடு முரடாக இருக்கும். பாதி தூரத்திற்கு சரளைக் கற்களால் நிறம்பிய பாதைதான். அதன்பிறகு மண் பாதை, சிறிது தூரத்திற்கு கூழாங்கல் நிறைந்த மிக்க் கடினமான பாதை. எனவே எந்த வாகனத்தில் சென்றாலும் மிக எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
கண்ணிற்கு எட்டியவரை நீண்ட பாதை மட்டுமே தெரியும். சாலை என்று அழைக்கப்படும் சிறு சிறு பாறைகள் நிறைந்த அந்த பாதைக்கு இரு மருங்கிலும் விதவிதமான செடிகளும், மரங்களும், கொடிகளும் படர்ந்திருக்கும்.
அப்படியே ஒரு சில கிலோ மீட்டர்கள் பயணித்தால் அந்த சாலை ஓரிடத்தில் முடிவுக்கு வரும். நீங்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்றிருந்தால் வேறு வழியே இல்லை. அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு சிறு ஓடையைக் (அந்த நீர்வீழ்ச்சிதான் ஓடையாக) கடந்து நடந்து செல்ல வேண்டும்.
ஒரு வேளை இருசக்கர வாகனத்தில் சென்றால் அந்த ஓடையில் உங்கள் வண்டியை இறக்கி தள்ளிக் கொண்டு சென்று பின்னர் ஓட்டிக் கொண்டு செல்லலாம். ஏனெனில் அது ஒத்தையடிப் பாதை.
நீங்கள் நடந்தாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி சரியாக 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த சுற்றுலாத் தலம் குழந்தைகள், முதியவர்களுக்கானது அல்ல. ஏனெனில் இத்தனை தூரம் அதுவும் கரடுமுரடான பாதையில் நடப்பது இவ்விருவருக்குமே சற்று சிரமமான காரியம்.
நடப்பது வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் அவ்வாறு இல்லை, இரு மருங்கிலும் இருக்கும் விதவிதமான செடிகளையும், நடுநடுவே ஓடும் ஓடைகளையும் தாண்டிச் செல்கையில் எந்த வலியும் தெரியாது.
5 கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் நீர்வீழ்ச்சியின் முக்கியமானதொரு இடத்தை அடையலாம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அடர்ந்த மரங்களுக்கு இடையே அந்த நதியின் ஓரத்தில் உள்ள இடம்தான் ஜப்பலமடுவு. தடா நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஒரு பெரிய ஓடையை காணலாம். அங்கு ஆள் மூழ்கும் ஆழத்திற்கு நீர் இருக்கும். குதித்தும், நீந்தியும், ஆடியும், பாடியும் மகிழலாம். உடலுக்கும், மனதிற்கும் சக்தியை ஏற்றிக் கொண்டு தடா நீர்வீழ்ச்சியைக் காண ஆயத்தமாக வேண்டும்.
2 கிலோ மீட்டர் தூரம் இந்த பயணம் அமையும். இதை மட்டும் நீங்கள் அடைந்துவிட்டால் போதும்.... பூமியில் இருக்கும் அந்த சொர்கத்தை நீங்கள் காணலாம். மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கும். அங்கு நீங்கள் தண்ணீரில் ஆட்டம் போடலாம். நீச்சலடித்து மகிழலாம், ஆனந்தக் குளியல் போடலாம். மலையின் உச்சயில் இருந்து கண்ணாடி போன்ற கற்களை சல்லென தழுவிக் கொள்ள அருவி மகள் கொட்டுவதையும், அங்கே சூழ்ந்திருக்கும் பாறைகள் அவளை ஏந்திக் கொள்வதையும் காணக் கண் கோடி வேண்டும்.

No comments: