Sunday, July 13, 2008

ஈரோடு மாவட்டம் - சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்: பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. 
வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் புதைபொருள் ஆய்வு இடம்.
தாளவாடி மலை: இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.
பண்ணாரியம்மன் கோவில்: ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
பவானி முக்கூடல்: காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
சென்னிமலைக் கோவில்: சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் துண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.
சிவன் மலைக் கோவில்: காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.
தொண்டீசுவரக் கோவில்: ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஔதக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.
மகிமலிசுரர் கோவில் பல்லவர் காலக் கோவில். மகிமலிசுரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.
கஸ்துரி ரங்கப் பெருமாள் கோவில்: ஈரோட்டிலே கஸ்துரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கட முடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்துரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" செய்தி வெட்டப்பட்டுள்ளது.

No comments: