Monday, July 14, 2008

திருநள்ளாறு - பகுதி 2

சனி தோஷ நிவர்த்தி தரும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர்! நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்; விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.
திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் "ஈசுவர பட்டம்" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
அமைவிடம் :
காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.
திருநள்ளாறு :
இத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
இங்குள்ள திருக்குளத்தில் சனி நீராடி சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும்.
சனியால் பாதிக்கப்பட்ட நளன் :
சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.
நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் தெரியவருகிறது. சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்ததால் நளமகராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியதாம்.
"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.
நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

No comments: