Monday, July 14, 2008

அறப்பளீஸ்வரர் கோவில்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை உச்சியில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோவில். சுமார் 1,300 ஆண்டுகள் முற்பட்டது இக்கோவில். இவ்வாலய நுழை வாயிலில் அடியார்களால் பூஜிக்கப்படும் லிங்கமும், இருயானைகளின் உருவங்களும் உள்ளன.
இக்கோவில் ஈசனை கரிகாலன் வைத்து வழிபட்டதாகவும் அவனைத் தொடர்ந்து ஒரு மன்னனும், மகேந்திரவர்மனும் வழிபட்டதாகவும் கூறுவர். இக்கோவிலினருகே ஓடும் ஐந்தாறின் முடிவில் 350 அடி உயரத்திலிருந்து ஆகாய கங்கை, நீர் வீழ்ச்சியாக விழுகிறது.
கருவறையில் மூலவரான அறப்பளீஸ்வரர் லிங்க வடிவில் அருள் புரிகிறார். இவருக்கு மகாலிங்க நாதர். தர்மகோனீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. தர்ம கோடீஸ்வரி தாயம்மன் ஆகிய பெயர்களுடன் தனிச் சந்நிதியில் அம்பிகை, திகழ்கிறாள்.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மைக்கு தனித்தனி ஆலயங்கள் உண்டு.விநாயகர், வள்ளி, தெய்வானன், முருகப் பெருமான், ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர் உட்பிராகரத்தில் சூரியன், சந்திரன், நவகிரகங்கள், சண்டேஸ்வரர், லட்சுமி சரஸ்வதி ஆகியோரைக் காணலாம்.
கருவறையின் கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் எழிலோடு வடிவமைக்கப் பட்டுள்ளனர். கொல்லிமலை பற்றி திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அறைப்பள்ளி, கொல்லிக்குளிர் அறப்பள்ளி, கமழ்க்கொல்லி அறப்பள்ளி எனப்பலவாறு குறிப்பிட்டுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் கொல்லிக் குமரனை இரு பாடல்களில் பாடியுள்ளார். இவ்வாலயத்தில் நாள்தோறும் ஐந்து கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கொல்லி மலை என்றாலே திகில் ஏற்படுத்துவது கொல்லிப்பாவைதான் இக்கொல்லிப்பாவை, தெய்வப் பெண். கொல்லிமலையில் தவம் செய்துவந்த தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்திய அசுரர்களை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் கொல்லிப்பாவை எனக் கூறப்படுகிறது. அசுரர்களை தனது அழகால்கவர்ந்து அருகே வந்தவுடன் அவர்களைக் கொல்லும் பாவையாக இருந்ததால், கொல்லிப் பாவை என்றாயிற்றாம்.
இப்பாவை இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகளால் பாதிக்கப்படுவதில்லை. எனவே இங்குள்ள மக்கள் கொல்லிப் பாவையை காவல் தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.
அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் இருபது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சோழ மன்னர்கள் பரகேரிவர்மன், ராஜகேசரிவர்மன், பராந்தக சோழன் ஆகியோர் காலத்தில் அளிக்கப்பட்ட மானியங்கள் பற்றிய தகவல்களை இவை தெரிவிக்கின்றன. இக்கோயிலின் மூலக்கருவறை விமானம், சோழப் பேரரசி செம்பியன் மாதேவி (10 ஆம் நூற்றாண்டு) காலத்தில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டுதோறும் ஆடி பதினெட்டு அன்று வில்வில் விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுகிறது.
குறிப்பு: நாமக்கல்லிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் கொல்லிமலை உள்ளது.

No comments: