சுற்றுலா இடமான சொர்க்கக் கோயில்
--------------------------------------------------------------------------------
தியன் தான் அல்லது சொர்க்கக் கோயில், சீனாவில் தற்போது காணப்படும் மிகப் பெரிய ஆலயக் கட்டிடங்களில் ஒன்றாகும். இது, 1420ம் ஆண்டில், கட்டப்பட்டது. மிங் மற்றும் சிங் வம்ச காலங்களின் பேரரசர்கள், வசந்தகாலத்தில் அமோக அறுவடை பெறவும், கோடைக்காலத்தில் மழை பெய்யவும் பிரார்த்தனை செய்து, குளிர்காலத்தில் சொர்க்கத்தை நோக்கி வணங்கிய இடமாகும். சுவர்க்கம் வட்டமானது, பூமி சதுரமானது என்ற பழங்கால நம்பிக்கையைப் பின்பற்றி, இங்குள்ள கட்டிடங்கள் பல வட்டமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
சொர்க்கக் கோயில், 260 ஹெக்டருக்கும் மேற்பட்ட நிலபரப்புடையது. இது, அரண்மனை அருங்காட்சியகத்தைப் போல் 3 மடங்கு பெரிதாக இருக்கின்றது. இது பழங்கால கட்டிடங்களில் தலைசிறந்த ஒன்றாகும். உலகில், இது, பெரும் புகழ்பெற்ற கோயிலாகும்.
அங்கு 300 மீட்டருக்கு மேலான நீளம் கொண்ட நடைபாதை ஒன்று இருக்கின்றது. இந்நடைபாதையில், நான்குத் திசையிலும் பார்த்தால், முதலில் கண்களுக்கு தெரிபவை, பரந்த வானமும் நல்ல அறுவடைக்காக பிரார்த்தனை செய்யும் மண்டபமுமே ஆகும்.
முக்கிய நுழை வாயிலில் நுழைந்ததும் பிரார்த்தனை மண்டபத்தின் காம்பீரமான தோற்றம், வருவோர் அனைவரையும் கவர்கிறது. மூன்று தட்டுத் தாழ்வாரம், கூம்பு வடிவிலான கூரை, உச்சியில் ஒரு தங்க மூடி ஆகியவற்றைக் கொண்ட இம்மண்டபம், ஒரு உன்னதமான, வட்ட வடிவான அமைப்பு ஆகும். அதன் மண்டப அமைப்பு மிகவும் நுட்பமானது. உள் கட்டுக்கோப்பில் அதன் முழு அமைப்பையும் தாங்குகின்ற உருக்கோ, காரையோ கிடையாது. 38 மீட்டர் உயரம் 30 மீட்டர் விட்டம் கொண்ட இம்மண்டபம், பிரமாண்டமான 28 மரத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. நடுவிலுள்ள நான்கு தூண்கள், வேதாள கிணற்றுத்தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 19.2 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் உடையவை. அவை நான்கும், நாலு காலங்களைக் குறிப்பனவாகும். அவற்றைச் சுற்றி உள்ளும் புறமுமாக ஒவ்வொன்றும் 12 தூண்களையுடைய 2 வளையங்கள் உள்ளன. உள் வளையம் ஆண்டின் 12 திங்கள்களையும், புற வளையம் சீன மக்கள் கணிக்கும் முறையில் பகலையும் இரவையும் குறிக்கின்றன.
1889ம் ஆண்டில், நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம் இடி மின்னல் காரணம் சேதமடைந்தது. அடுத்த ஆண்டில், பேரரசர் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து, இம்மண்டபத்தைச் சீரமைப்பது பற்றி விவாதித்தார். குறிப்பிட்ட வடிவமைப்பு மாதிரி இல்லாததால், உழைப்பாளர்கள், தங்கள் நினைவில் இருந்த உருவத்தை மாதிரியாகக் கொண்டு, கட்டியமைத்தனர். எனவே, தற்போதைய நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம், சிங் வம்ச காலத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனால், இதன் அடிப்படைக் கட்டிட நடை மற்றும் அமைப்பு, மிங் வம்சத்தின் மாதிரியைப் போன்று காணப்படுகிறது.
No comments:
Post a Comment